அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி திருச்சி அருகே அரசு ஊழியர் திடீர் கைது

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த அரசு ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2021-06-26 04:37 GMT

அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர் அன்பழகன் கைது.


உப்பிலியபுரம்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த அரசு ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

முசிறி அருகே சிட்டிலறை கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் அன்பழகன்(44). இவர் முசிறியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துனராக பணி செய்கிறார். இவருடைய உறவினரான உப்பிலியபுரம் அருகே எரகுடி கிராமத்தைச் சேர்ந்த சங்கரின் மகன் அருண்பாண்டியனுக்கு (24) தமிழ்நாடு மின்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2020ம் ஆண்டு ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கம் பெற்றுள்ளார்.

அதேபோல், அருண்பாண்டியன் உறவினர்கள் கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரமும், அருண் என்பவரிடம் ரூ. 3 லட்சத்து 33 ஆயிரத்தையும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அன்பழகன் ரொக்கம் பெற்றுள்ளார்.

இவர்கள் பலமுறை வேலை சம்பந்தமாக அன்பழகனிடம் கேட்டபோது இன்னும் பத்து நாட்களில் வந்துவிடும் என்று கூறி நாட்களைக் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கண்ணனூர் அஞ்சலகத்திலிருந்து அருண்பாண்டியனுக்கு இன்டர்வியூ கார்டு சென்றுள்ளது. கண்ணனூர் அஞ்சலகத்திலிருந்து இன்டர்வியூ கார்டு எப்படி அனுப்புவார்கள்? என்று சந்தேகப்பட்டு அன்பழகனிடம் விசாரித்த போது அவர் முண்ணுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

இதையடுத்து அன்பழகனிடம் வேலைக்காக பணம் கொடுத்த அருண்பாண்டியன் உள்ளிட்டோர் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிந்து அன்பழகனை நேற்று கைது செய்தனர்.




Tags:    

Similar News