சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-24 11:03 GMT

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் 8-ஆம்வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரிடம் ஆசை வார்த்தை கூறி முசிறி கீழத்தெருவை சேர்ந்த ரத்தினவேல் என்கிற ஜாக்கி (வயது 21) பாலியல் தொடர்பு கொண்டுள்ளார்.

இதனை கேள்விப்பட்டு முசிறி திருத்தலையூர் சேர்ந்த பாபு (25) என்பவர் அதேபோல சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொடர்பு கொண்டுள்ளார்.மேலும் தொட்டியம் அருகே உள்ள அப்பணநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரும் அதே பாணியில் பாலியல் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்படவே அவருக்கு முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இதில் அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் கிடைத்த முசிறி சமூக நல அலுவலர் ஆரோக்கியமேரி ஜெயா  மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு விசாரணை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேல் மற்றும் 16 வயது சிறுவனையும் கைது செய்து உள்ளனர். மேலும் இது போல் யாரும் பாலியல் தொடர்பு கொண்டுள்ளனரா? என்பது குறித்தும்? சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News