மணப்பாறையில் சாக்கு மூட்டையில் மனுக்களுடன் முதியவர் உண்ணாவிரதம்
மணப்பாறையில் சாக்குமூட்டையில் மனுக்களுடன் உண்ணாவிரதம் இருந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 74). விவசாயியான இவர் தனது நிலத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகளுக்கு மனு அளித்தார். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் வேதனை அடைந்த பொன்னுச்சாமி 10 ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுக்களின் நகல்களை ஒரு மூட்டையாக கட்டினார். பின்னர் அந்த சாக்கு மூட்டை யுடன் மணப்பாறை பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மணப்பாறை தாசில்தார் சேக்கிழார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து முதியவர் பொன்னுசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து பின்னர் பொன்னுச்சாமி அங்கிருந்து எழுந்து சென்றார்.