மணப்பாறை அருகே கிணற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் பலி

மணப்பாறை அருகே கிணற்றில் குளித்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் உயிரிழந்தார்.

Update: 2021-12-20 05:21 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டி தகரகளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24). இவர் மணப்பாறையில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவரின் கிணற்றிற்கு குளிக்க சென்றவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இது குறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

அப்போது தண்ணீர் அதிகமாக இருந்ததால், நீரில் மூழ்கி உடலை மீட்கும் காளை என்பவரை அழைத்து வந்தனர். அப்போதும் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் நவீன கேமராவின் மூலம் வாலிபரின் உடல் எங்கு உள்ளது என்று கண்டறியப்பட்டது. 

இதனை தொடர்ந்து கிணற்றில் உள்ள தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபர் உடல் பிணமாக மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News