வாக்குச்சாவடி கைப்பற்ற திமுக முயன்றதாக கலெக்டரிடம் அதிமுகவினர் மனு

வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டரிடம் மனு.

Update: 2021-10-09 12:45 GMT

வாக்குச்சாவடி கைப்பற்ற திமுகவினர் முயன்றதாகக்கூறி மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர். 

திருச்சியில், வாக்குச்சாவடியை கைப்பற்ற திமுகவினர் முயன்றதாகக்கூறி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி,யுமான ப.குமார் புகார் மனு கொடுத்தார்.

மனுவில் அவர் கூறியுள்ளதாவது: இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில்,  வையம்பட்டி ஒன்றிய 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 30, 31 மற்றும் 37 ஆகிய வாக்குசாவடிக்குள் அத்துமீறி நுழைந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் மற்றும் அவருடன் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுகவை சார்ந்த 100 நபர்கள், தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச் சாவடியை கைப்பற்ற முயற்சி செய்தது ஜனநாயக படுகொலையாகும்.

இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த இடைத்தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Similar News