திருச்சி அருகே லாரி உரிமையாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை

திருச்சி அருகே லாரி உரிமையாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-01-09 13:24 GMT
கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடியை சேர்ந்த  ராஜமாணிக்கம் என்பவரது மகன் சதீஷ்குமார் (32). சொந்தமாக லாரி ஒன்றை வைத்துள்ளார். தற்சமயம் மண்ணச்சநல்லூர் காந்திநகரில் உள்ள 7-வது குறுக்கு சாலையில் வசித்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும், 21/2 வயதில் பிரபஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வடக்கு ஈச்சம்பட்டி அருகே உள்ள வறட்டு ஏரியில் கம்பியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சதீஷ்குமாரை அடித்துக் கொலை செய்யப்பட்டு தண்ணீரில் தூக்கி வீசி உள்ளனர்.

சதீஷ்குமார் கொலை செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக கூடினர்.

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் மண்ணச்சநல்லூர் போலீசார் சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி, வீரர்கள் சுதர்சன், கிருஷ்ணன் திவாகரன், சௌந்தரராஜன், ராஜேந்திரன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஏரியில் சடலமாக கிடந்த சதீஷின் உடலை மீட்டனர். பின்னர் உடலை கைப்பற்றிய மண்ணச்சநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் ஜீயபுரம் டி.எஸ்.பி. ஆகியோர்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News