காதல் திருமண ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு மற்றும் கொலுசு ஆகியவற்றை கழற்றி போலீசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

Update: 2021-12-04 07:00 GMT

பைல் படம்.

திருச்சி அருகே உள்ள முத்தரசநல்லூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் யோகலட்சுமி (வயது 21). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் (வயது 23) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே நேற்று காலை இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து, அந்த காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்து காவல் நிலையம் வரவழைத்தனர். இதில் யோகலட்சுமி தனது பெற்றோருடன் செல்ல மறுத்து காதல் கணவருடன் தான் செல்வேன் என்று கூறினார். மேலும், தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு மற்றும் கொலுசு ஆகியவற்றை கழற்றி போலீசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து போலீசார் யோகலட்சுமியை ரவிச்சந்திரனுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சமயபுரம் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News