லாரி ஓட்டுனரை தாக்கிய புகாரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

லாரி ஓட்டுனரை தாக்கிய புகாரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2022-01-04 03:26 GMT

சமயபுரம் அருகே போலீசார் லாரி டிரைவர் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

சென்னையிலிருந்து திருச்சி திருவெறும்பூர் பி.ஹெச்.இ.எல். நிறுவனத்திற்கு இரும்புகளை லாரியில் ஏற்றி வந்த போது சமயபுரம் சுங்கசாவடியில் லாரி ஓட்டுநர் ஆயரசனிடம் சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ், பர்மிட், பில், தபால் கேட்டுள்ளார். இதில் நடந்த வாக்குவாதத்தில் லாரி ஓட்டுநர் ஆயரசனை போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர் ஆயரசன் சிகிச்சைக்காக திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ் திருச்சி மாவட்ட ஆயுதபடை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

Tags:    

Similar News