திருச்சி அருகே மாதிரி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி அசத்திய அரசு பள்ளி

திருச்சி அருகே சிறுகாம்பூர் அரசு பள்ளியில் மாதிரி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-11-26 07:00 GMT

திருச்சி அருகே சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட மாதிரி சட்டசபை தேர்தலில் மாணவி ஒருவர் வாக்களித்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. 1962 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி. பின்னாளில் 91-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 35 ஆசிரியர் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 431 மாணவர்கள் 412 மாணவியர்கள் என 843 பேர் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் பல்வேறு கட்ட முன்னேற்பாடுகளை செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்திய குடியாட்சி தத்துவத்தின் மேன்மையை பள்ளி மாணவ- மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் ஏற்பாட்டில் மாணவர் மாதிரி சட்டப்பேரவைத் தேர்தல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்காக தேர்தல் ஆணையர் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த மாதிரி சட்டசபை தேர்தல் இந்தியத் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்தலைப் போலவே மாணவர்கள் வாக்கு சாவடியினுள் வாக்கு சீட்டை பயன்படுத்தி வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவப் பிரதிநிதிகளுக்கு கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், கலை, பண்பாடு, ஒழுங்கு, சட்டம் போன்ற துறைகள் ஓதுக்கீடு செய்யப்பட்டன. மாணவர்களின் நலனில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இதன் மூலம் மாணவர்களின் தலைமைப்பண்பு ஆளுமைத் திறன்- தன்னம்பிக்கை, உயர, எண்ணங்கள் ஆகியவை மாணவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டது.

பள்ளியில் நடைப்பெற்ற மாணவர் சட்டபேரவை தேர்தலில் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பள்ளி வருகை சதம் குறைவாக பெற்றதால் 3 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள17 பேர்களில் 11 மாணவிகளும், 6 மாணவர்களும் தேர்தலில் போட்டியிட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்த மாணவ, மாணவிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இறுதியாக தேர்தலில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் ஆசிரியர்களும் வாக்களித்தனர். இறுதியாக வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றியின் முடிவுப்படி முதல்வர், துணை முதல்வர் அறிவிக்கப்பட்டனர். மற்ற இலாகா மந்திரிகளை வெற்றி பெற்ற நிர்வாகம் தேர்த்தெடுக்கும். தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்கள் எதிர் கட்சியாக செயல்படுவார்கள். இதன் மூலம் ஜனநாயகத்தில் மாணவ, மாணவிகளின் அடிப்படை தேவைகளை எவ்வாறு பெறுவது, எந்த நிர்வாகத்தை அனுகுவது, உரிமைகள் பறிக்கப்படும்போது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை அறிந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பள்ளியின், வளர்ச்சிக்கும், கட்டமைப்புக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் மாணவர் மாதிரி சட்டப்பேரவை தேர்தலின் நோக்கமாகும். ஜனநாயக நெறி முறைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு ஜனநாயக பண்புகளை கற்றுக் கொடுக்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக அமைக்க அரசு செயல்படுத்த வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ் அரசுக்கு கோரிக்கையாக வைத்தார்.

Tags:    

Similar News