திருச்சி வாத்தலை அருகே விவசாயி கொலை:ஒருவர் கைது.

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-24 15:45 GMT
திருச்சி மாவட்டம் வாத்தலையில் கொலை செய்யப்பட்ட விவசாயி மருதை

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள தெற்கு சித்தாம்பூர் அர்ஜுன தெருவை சேர்ந்தவர் மணி என்கிற மருதை (வயது 51), அதே பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவர்கள் இருவரும் விவசாயிகள். இரண்டு பேருக்கும் சித்தாம்பூர் அருகே ஐயாற்று பகுதியில் அருகருகே சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டார் ஒன்றை தனது வயலுக்கு அருகில் மருதை அமைத்திருந்தார். இதனை பார்த்த செந்தில் எனது இடத்தில் எப்படி வைக்கலாம் என்று தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக கடந்த மூன்று நாட்களாக மருதை மற்றும் செந்தில் இரண்டு பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை தெற்கு சித்தாம்பூர் கடைவீதியில் உள்ள ஒரு மரத்தடியில் நின்று மருதை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்தில் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மருதையிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து மருதை மீது வீசியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து மருதை சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மருதைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். அப்போது மருதை பேச்சு, மூச்சு இன்றி கிடந்தார். பின்னர் அவர் இறந்தது தெரியவந்தது.

மருதை இறந்ததை அறிந்த செந்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News