திருச்சி அருகே கோவில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருச்சி அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Update: 2021-11-26 04:30 GMT

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் டோல்கேட் அருகே லால்குடி செல்லும் சாலையில் தாளக்குடி கிராம கோவிலான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது கண்டு திடுக்கிட்டார்.

இதேபோல, அருகிலிருந்த மற்றொரு கோவிலான அடைக்கலம் காத்த அம்மன் கோவிலின் கதவும் உடைக்கப்பட்டு சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், கொள்ளிடம் நெம்பர் 1 டோல்கேட் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் காவலர்கள்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News