திருச்சியில் தொழிலதிபரை அவரது சொந்த காரிலேயே கடத்திய கும்பல் கைது

திருச்சியில் தொழிலதிபரை அவரது சொந்த காரிலேயே கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-06 12:45 GMT

திருச்சி திருவளர்ச்சோலை கல்லணை சாலையில் உள்ளது சாய்பாபா கோவில். இதற்கு அருகில் வசித்து வருபவர் ஜோசப் வல்லவராஜ். தொழில் அதிபரான இவருக்கும், திருச்சியை சேர்ந்த சுந்தரி என்கிற பெண்மணிக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தில்லை நகரில் ரூமில் சுந்தரியுடன் ஜோசப் வல்லவராஜ் தங்கியிருந்த நிலையில் ஜோசப் வல்லவராஜிடம் நிறைய பணம் உள்ளதை அறிந்து கொண்டு கடத்தல் கும்பலுக்கு சுந்தரி தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜோசப் வல்லவராஜை (வயது 50) 5 பேர் கொண்ட கும்பல் அவரது சொந்தக் காரில் கடத்திக் கொண்டு லால்குடி மார்க்கமாக சென்றுள்ளனர்.  சமயபுரம் டோல்கேட் அருகே மாந்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த லால்குடி போலீசார் காரை நிறுத்தி விசாரித்தபோது ஐந்து பேர் கொண்ட கும்பல் தனது சொந்த காரில் கடத்தி செல்வதாகவும், ரூ. 1 லட்சத்தை கூகுள்- பே வாயிலாக பரித்து கொண்டதாகவும் ஜோசப் வல்லவராஜ் புகாராக கூறியுள்ளார்.

இதையடுத்து திருச்சி லால்குடி கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 27), திருவெறும்பூர் வடக்கு காட்டூர் நடுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சபரி (வயது 28), லால்குடி கொடிக்கால் தெரு, சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 20), லால்குடி சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 30), லால்குடி தெற்கு தெருவை சேர்ந்த கவின்குமார் (வயது 21) உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் இவர்கள் மீது வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை பெற்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து 5 பேரையும் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுந்தரி மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள இளைஞர்களை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News