திருச்சி அருகே செல்போன் கடையின் பூட்டு உடைத்து செல்போன்-பணம் திருட்டு

திருச்சி அருகே புள்ளம்பாடியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-01-24 08:03 GMT

கல்லக்குடி காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அடைக்கம் காலனியைச் சேர்ந்தவர் நாகரத்தினம் மகன் தீபக்குமார் (வயது 27). இவர் புள்ளம்பாடி கடைவீதியில் செல்லி என்ற பெயரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி இரவு 10 மணி அளவில் தனது பணிகளை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் கடை திறக்கவில்லை.

இந்நிலையில் தீபக்குமாரின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்த தீபக்குமார் உடனடியாக கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது 6 ஆண்ட்ராய்டு செல் போன் மற்றும் பணம் ரூ.7,500 -ஐ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கல்லக்குடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News