வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபர் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-03-07 06:00 GMT

திருச்சி நெம்பர்.1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தனது மனைவிக்கு வேலைக்காக இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர்ரெட்டி (வயது 27) என்பவர் இணையதளம் மூலம் கிருஷ்ணகுமாரிடம் அறிமுகமானார்.

அவர் உங்கள் மனைவிக்கு பிரபல தனியார் நிறுவனத்தில் நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். அதை நம்பி பல தவணைகளாக ரூ.29 லட்சம் வரை கிருஷ்ணகுமார் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரவிசங்கர் ரெட்டி வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ணகுமார் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ரவிசங்கர் ரெட்டியைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சென்று அங்கு பதுங்கியிருந்த ரவிசங்கர் ரெட்டியை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் ஸ்ரீரங்கம் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News