லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்
லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டது.;
லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்பர்மோகன்ராஜ். இவருக்கு ஆண்டோ, புதின் என்ற இரண்டு மகன்கள் உண்டு. ஆண்டோ (வயது 17). மற்றும் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளனர். ஆன்டோ மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் ஆற்றில் குளிக்க இறங்கிய நிலையில் மற்ற இருவரும் ஆற்றின் கரையில் மேலே வந்து விட்டனர். இதில் ஆழம் மிகுதியான இடத்தில் மாட்டிக் கொண்ட ஆண்டோ தண்ணீரில் தத்தளித்த நிலையில் நிலை தடுமாறி நீரில் மூழ்கி மேலே கையை உயர்த்தி உள்ளார்.
தண்ணீர் இழுத்து சென்றதை அறிந்த நண்பர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். ஆனால் அவர்களுக்கும் நீச்சல் தெரியாது என்பதால் ஆற்றில் குதித்து காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லை. எனவே அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்னர்.
பின்னர் இதுகுறித்து லால்குடி தீயணைப்பு துறைக்கும், லால்குடி காவல் நிலையத்திற்கும், ஆண்டோவின் தந்தை மற்றும் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து லால்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் நீரில் மூழ்கிய ஆண்டோவின் உடலை தேடினர். லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு படையினர் தேடி வந்த நிலையில் நேற்று ஆண்டோ உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை ஆண்டோ உடல் மீட்கப்பட்டது.
ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட உடலை உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.