அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை டால்மியா சிமெண்ட் வழங்கியது.

Update: 2022-03-03 05:24 GMT

டால்மியா சிமெண்ட் சார்பில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, கல்லக்குடி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளுக்கு டால்மியா சிமெண்ட் ஆலை நிறுவனம் சார்பில் ரூ. 5.25 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரண பொருட்கள் வழங்கும் விழா அரசு மருத்துவமனையில்  நடைபெற்றது. விழாவிற்கு புள்ளம்பாடி வட்டார மருத்துவர் பாஸ்கரன்  தலைமை தாங்கினார். டால்மியா ஆலை துணை பொதுமேலாளர் சுப்பையா, மேலாளர் ரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் சிமெண்ட் ஆலை தலைவர் விநாயகமூர்த்தி கலந்து கொண்டு கல்லக்குடி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு 2.50 லட்சம் மதிப்பிலும், புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு 2.75 லட்சம் மதிப்பிலும் ஆபரேஷன் செய்யும் படுக்கைகள், தாய்மார்கள் குழந்தை பிரசவிக்கும் படுக்கைகள், நோயாளிகள் படுக்கைகள், கொதிகலன், கைவண்டி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரண பொருட்களை வழங்கினார். விழாவில்  ஆலை அதிகாரிகள், டால்மியா மருத்துவமனை மருத்துவர் மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக டால்மியா பாரத் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் கல்லக்குடி அரசு மருத்துவர் ஆல்வின் நன்றி கூறி பேசும்போது இந்தப் பகுதியில் அரசு மூலம் மருத்துவம் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போதும், குறிப்பாக கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் செய்யும்போது தேவையறிந்து தேவையான உதவிகளை டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாகம் செய்து கொடுத்ததால் எங்களுக்கு மேலும் ஈடுபாட்டுடன் பணிபுரிய உத்வேகம் கொடுத்தது. அதனால் நிர்வாகத்திற்கு எங்கள் மருத்துவ குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

Tags:    

Similar News