பள்ளிக்கட்டணத்துக்காக பெற்றோர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் :தாசில்தார் விசாரணை

அரசு கூறியுள்ள விதிமுறைகளை மீறி கல்வி கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் அமுதா தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-02 16:00 GMT

பள்ளியின் மாதாந்திரக்கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை தனி அறையில் வைத்து கட்டாயப்படுத்தியதாக எழுந்த புகாரை கோவில்பட்டி தாசில்தார் விசாரணை நடத்தியதால் தனியார் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஆழ்வார் தெருவில் செயின்ட் பால்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு மாதம் தோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, அந்த விடைத்தாள்கள் பெற்றோர்கள் மூலம் பள்ளி நிர்வாகம் பெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று விடைத்தாள்கள் கொடுக்க சென்ற பெற்றோரிடம் கடந்த மாதம் பள்ளியின் மாதாந்திர கட்டணத்தினை கட்ட தவறியவர்களை ஒரு அறையில் வைத்து கட்டணத்தினை கட்ட சொல்லி வலியுறுத்தியதாக புகார் எழுந்தது. அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் தந்தை ஆரோக்கிய ராஜ் என்பவர் பள்ளி நிர்வாகத்தினை கண்டித்து பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஏற்கெனவே அனைத்துவிதமான கட்டணத்தையும் செலுத்திய பின்னர், மாதாந்திர கட்டணம் செலுத்த காலதாமதம் ஏற்பட்டதால் விடைத்தாள்களை வாங்க மறுத்ததாகவும், பணத்தை செலுத்தி டோக்கன் வாங்கி வந்தால் மட்டுமே விடைத்தாள்களை பெறுவோம் என்று கூறி ஒரு அறையில் பெற்றோர்களை காத்திருக்க வைத்ததாகவும் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவலறிந்த செய்தியாளர்கள் அங்கு சென்றதால், ஆரோக்கியராஜ் உள்பட அங்கிருந்த பெற்றோர்களிடம் விடைத்தாள்களை பள்ளி நிர்வாகம் பெற்றுக்கொண்டதாம். தகவல் கிடைத்து அப்பள்ளிக்குச் சென்ற கோவில்பட்டி தாசில்தார் அமுதா மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆரோக்கியராஜ் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி கட்டணத்தினை கட்டாயப்படுத்தி வசூலிக்க கூடாது, அரசு கூறியுள்ள வழிமுறைகளின் படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு தாசில்தார் அமுதா அறிவுறுத்தினார். இனிமேல் கட்டணம் கேட்டு  நெருக்கடி கொடுத்தால் புகார் அளிக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்ட ஆரோக்கியராஜிடம் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News