நீர் மேலாண்மையை உருவாக்குவதே எனது லட்சியம்: திருவையாறில் முதலமைச்சர்

Update: 2021-03-17 06:45 GMT

தஞ்சாவூர் அருகே திருவையாறில் பாஜக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது, திருவையாறு பகுதியில் விவசாயிகளின் நலனுக்காக கல்லணை கால்வாய் 290 கோடி ரூபாயில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. டெல்டா விவசாயிகள் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால் அந்த அச்சத்தைப் போக்கும் விதமாக இந்த பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக எனது தலைமையிலான அரசு அறிவித்து விவசாயிகளின் அச்சத்தை போக்கி உள்ளோம்.

விவசாயிகள் வழியில் வந்த ஒருவருக்கு தான் விவசாயிகளுடைய சிரமங்கள் வேதனைகள் தெரியும். எனவேதான் இந்த பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டு காலமாக போதிய தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு கர்நாடகாவிடம் போராடி தண்ணீரை பெற்று விவசாயம் செய்து வந்தோம், இதற்கு சட்டப் போராட்டங்களை நடத்தி ஜெயலலிதாவின் எண்ணத்தை எனது தலைமையிலான அரசு தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது.

காவிரி கோதாவரி திட்டம் விரைவில் வெற்றி பெறும் விவசாயிகள் எந்த ஒரு திட்டத்தை தொடங்கினாலும் வெற்றி பெறும், அதுபோல இந்த திட்டத்துக்கு விவசாயி ஆகிய நான், அருகில் உள்ள ஆந்திரா தெலுங்கானா முதல்வர்களை தொடர்பு கொண்டு, இந்தத் திட்டத்துக்கு உரிய தண்ணீரை கேட்டும் இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ 80 ஆயிரம் கோடி செலவாகும் என பிரதமரிடம் எடுத்துக் கூறி அதற்கான நிதியையும் தருகிறேன் என உறுதிமொழி அளித்துள்ளார்.

தமிழகத்தில் நீர் மேலாண்மை கொண்டு வருவதே எனது லட்சியம். இந்த பகுதியில் திருவையாறு திருக்காட்டுப் பள்ளிக்கு புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது, விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் தான் சில திட்டங்களை சொல்வார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே விவசாயிகளுடைய கடன்களை தள்ளுபடி செய்து அதற்கு சான்றிதழும் வழங்கி உள்ளோம், இந்த தொகுதியில் ஏழை மாணவர்களும் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லூரியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை திமுக ஆட்சியில் கொண்டு வந்தார்களா என்பதை இங்கு உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் 41 சதவீத மாணவர்கள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர் நானும் அரசு பள்ளியில் படித்தவன் என்பதால் அரசு பள்ளி மாணவர்களின் சிரமங்களை நன்கறிவேன். கடந்த ஆண்டு 6 பேர் நீட் தேர்வில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர் ஆனால் தற்போது 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை தொடர்ந்து 435 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றனர் அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் இந்த அரசு கட்டியுள்ளது.

வீடு இல்லாத நிலையை அனைவருக்கும் உருவாக்க வேண்டும் என்பதால் ஏழை எளியோருக்கு அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும். தற்போது கொரோனா காலம் என்பதால் கொஞ்சம் அதிகமாக பரவி வருகிறது எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்று தனது பிரச்சாரத்தில் பேசினார்.

Tags:    

Similar News