திருக்காட்டுப்பள்ளியில் கறிக்கடைக்காரர் வெட்டிக் கொலை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கறி கடைக்காரர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-10-06 03:15 GMT

திருக்காட்டுப்பள்ளியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கறி கடைக்காரர்.

திருவையாறு அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் குடிபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள் கறிக்கடைக்காரரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணையில்

திருக்காட்டுப்பள்ளி அண்ணாசிலை அருகே மீன்கொட்டகை பகுதி சேவு மகன் செல்வம்(45). இவருக்கு வேதவல்லி(38) என்ற மனைவியும், அம்பிகா என்ற மகளும், ராம்குமார் என்ற மகனும் உள்ளனர். இவர் வீட்டின் முன்புறம் கறிகடை வைத்து விற்பனை செய்து வந்தார். புரட்டாசி மாதம் என்பதால் கறி விற்பனையை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் கறி வெட்டும் மரத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.

அவர்களை கண்டித்த செல்வத்திடம், இளைஞர்கள்  தகராறு செய்து தாக்கினர். இதில் ஒரு இளைஞர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வத்தின் இடது கழுத்தில் வெட்டியுள்ளார். அரிவாள் வீசியபோது அருகில் நின்ற அப்பகுதி இளங்கோவன் மகன் அனந்தகிருஷ்ணன்(28) வலது கையிலும் காயம் ஏற்பட்டது.

உடனடியாக வெட்டுப்பட்ட செல்வத்தை திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து தகவல் கிடைத்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் செல்வத்தின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் காயம் அடைந்த அனந்தகிருஷ்ணனை தஞ்சை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News