தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனை

தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-12 06:00 GMT

என்ஐஏ அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்.

கிளாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து மண்ணை பாபா என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த இயக்கத்தில் தொடர்புடையதாகக் கூறி தஞ்சை கீழவாசல் மகர்நோம்புசாவடி தைக்கால் தெருவை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் காதர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முகமது யாசின், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியை சேர்ந்த அகமது ஆகியோர்களது வீட்டில் தேசிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரம் சோதனை நடத்தினர்.

சோதனையில் அவர்களிடம் இருந்து மொபைல், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.

அதிகாரிகள் சோதனை செய்வதை அறிந்த அப்பகுதி மக்கள், அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் என்ஐஏ அதிகாரிகள் வாகனங்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முகமது யாசின் மற்றும் காதர் கூறுகையில், அதிகாரிகள் காலை 5.30 மணியளவில் வந்து சோதனை செய்தனர். சோதனை செய்வதற்கு அனைத்தும் ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக கூறினார்கள். மேலும் எதுவும் இங்கிருந்து எடுத்து செல்லவில்லை. தங்களுடைய மொமைல் போன், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகளை மட்டும் எடுத்து சென்றனர் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News