காவல்துறையை தரக்குறைவாக பேசி மிரட்டிய பெண்
தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண், அபராதம் விதித்த காவல்துறையை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது முகக்கவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து வருகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணை நிறுத்தி 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறியுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் காவலரை பார்த்து சின்ன முகக்கவசத்திற்கு 200 ரூபாய் கட்ட சொல்றிங்களே உனக்கு அசிங்கமா இல்லையா? என சீறினார்.
இது ஆட்சியர் உத்தரவு என காவலர் கூற, மாவட்ட ஆட்சியரையும் தகாத வார்த்தைகளில் திட்டத் தொடங்கினார். அவர் ஆவேசமாக பேசியதை செல்போனில் வீடியோவாக எடுத்த காவலரையும் தரக்குறைவாக பேசி, நானும் ரவுடிதான் என கூறி மிரட்டினார்.
இதுபோன்ற பொது இடங்களில் மாவட்ட ஆட்சியரையும், காவல்துறையினரையும் தரக்குறைவாக பேசிய பெண் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.