பாலம் இன்றி இடுப்பளவு தண்ணீரில் இறுதிச் சடங்கிற்கு தூக்கிச்சென்ற சடலம்

பேராவூரணி அருகே பாலம் இன்றி இடுப்பளவு தண்ணீரில் இறுதிச் சடங்கிற்கு சடலத்தை மக்கள் தூக்கிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-14 05:15 GMT

பேராவூரணி அருகே இடுப்பளவு தண்ணீரில் சடலைத்தை சுமந்து செல்லும் மக்கள்.

பேராவூரணி அருகேயுள்ள வீரியங்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடலை எரிப்பதற்கு மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் இருந்து முடச்சிக்காடு செல்லும் சாலையில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கான மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே கல்லணை கால்வாயின் கிளை பாசன வாய்க்கால் உள்ளது. இதில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வாய்க்காலில் பாலம் இல்லாததால் சடலத்துடன் உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி அதனை கடந்து மறுபுறம் சென்று மகாலிங்கம் உடலுக்கு இறுதி நிகழ்ச்சிகள் செய்தனர்.  வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும்போது தொடர்ந்து இதுபோல் இன்னல்கள் ஏற்படுவதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் பாலம் அமைத்து மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News