சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் பேராவூரணி எம்எல்ஏ ஆய்வு

சட்டமன்றத்தில் சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது

Update: 2021-08-30 12:00 GMT

 சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகத்தை நேரில் ஆய்வு செய்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் மற்றும் அதிகாரிகள்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகம், ரூ 1 கோடியே 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு, கடந்த 27.10.2003 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது இந்த மீன்பிடி இறங்குதளத்தை நவீன வசதிகளுடன் புதுப்பித்து தரவேண்டும், முகத்துவாரங்களை தூர்வாரி சீரமைத்து தரவேண்டும் என, நடந்து  முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது  பொதுமக்கள், மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், சட்டமன்றத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி,  சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளத்தை மேம்படுத்த  ரூ. 10 கோடி நிதியை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு, மீனவர்களிடம் ஆலோசனை நடத்தினார். விரைவில் பணிகள் தொடங்கும், மீனவர்களின் கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என  தெரிவித்தார். முன்னதாக துறைமுகத்திற்கு நிதி ஒதுக்கீடு பெற்றுத் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மீனவர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.  ஆய்வின் போது, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி தெற்கு க.அன்பழகன், வடக்கு இளங்கோவன், விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் செல்வக்கிளி, ராஜமாணிக்கம், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகஜோதி செந்தில் அதிபன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சமயமுத்து, லியாகத் அலி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாமா செந்தில்நாதன், சாகுல்அமீது, சந்திரன், லிங்கநாதன் மற்றும் மீனவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News