நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் குடல் வால்வு அகற்றம் : அரசு மருத்துவர்கள் சாதனை

கொரோனா பெருந்தொற்று பரவல் ஆபத்துள்ள சூழ்நிலையில், சிறப்பான முறையில் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்தனர்

Update: 2021-09-09 07:26 GMT

நுண்துளை சிகிச்சை முறையில் குடல்வால் அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட பேராவூரணி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனையில், ஏழைப்பெண்ணுக்கு, நுண்துளை அறுவை சிகிச்சை மூலம், வெற்றிகரமாக குடல்வால்வை அகற்றி, அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி. இவரது மனைவி கலைச்செல்வி (34). கலைச்செல்வி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்த போது, குடல் வால்வு வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சைக்கு ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை செலவாகும் என்ற நிலையில், அவர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இவரை பரிசோதனை செய்த தலைமை மருத்துவர் பாஸ்கர், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசன்னா வெங்கடேசன், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் சுதாகர் அடங்கிய குழுவினர், அவருக்கு அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்தனர்.  இதற்கான கூடுதல் மருத்துவ உபகரணங்களை, இந்திய மருத்துவ சங்க பட்டுக்கோட்டை கிளை தனியார் மருத்துவர் மூலம் வாங்கி, அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த செப்.3 -ஆம் தேதி மருத்துவமனையில் கலைச்செல்வி அனுமதிக்கப்பட்டார். மறுநாள் செப்.4 -ஆம் தேதி சனிக்கிழமை அவருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை (லேப்ராஸ்கோபிக் அப்பெண்டிக்ஸ் செக்டமி) மூலம் குடல் வால்வு அகற்றப்பட்டது. இந்த அறுவை சி‌கி‌ச்சையை, தலைமை மருத்துவர் பாஸ்கர், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசன்னா வெங்கடேசன், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் சுதாகர், தலைமைச் செவிலியர் சித்ரா, செவிலியர்கள் விமலா, பிரபா மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக செய்தனர்.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பெரிய காயம், தழும்பு இல்லாமல், வு தரமான முறையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை, தொடர் கண்காணிப்பு முடிந்து, செப்.8 புதன்கிழமை அன்று கலைச்செல்வி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் பிரபலமான தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும், மிகவும் கண்காணிப்பு தேவைப்படும் இச்சிகிச்சையை, போதிய வசதிகள் இல்லாத நிலையில், பேராவூரணி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சவாலாக எடுத்துக் கொண்டு இச்சாதனையை செய்துள்ளனர். அவர்களுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தைராய்டு சுரப்பி வீக்கத்தால் பாதிக்கப்பட்ட, பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயலெட்சுமி (43) என்ற பெண்ணுக்கு, மிக, மிகக் கவனம் தேவைப்படும் முழு மயக்க மருத்துவம் மூலம், டாக்டர்கள் பிரசன்னா வெங்கடேசன், சந்திரசேகர், சுதாகர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பி வீக்கம் முழுவதையும், வெற்றிகரமாக அகற்றி, நோயாளி தற்போது பூரண உடல்நலத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் விட்டால் புற்றுநோய் அபாயம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. 

கொரோனா பெருந்தொற்று பரவல் ஆபத்தான சூழ்நிலையில், சிறப்பான முறையில் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து நோயாளிகளை குணப்படுத்திய டாக்டர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News