நிவாரணத் தொகையை உயர்த்த மீனவர்கள் கோரிக்கை
மீன்பிடி தடை காலத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை;
தஞ்சை மாவட்டக் கடற்பகுதியில் 37 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. இதில் 1500 நாட்டுப் படகுகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் மூலம் 10000 க்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இதில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன் இனப்பெருக்க காலம் என்பதால் அந்த காலகட்டத்தில் மீன்பிடி தடை காலமாக அரசு அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு, விசைப்படகு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி இல்லை.
இந்த காலகட்டத்தில் மீனவர்களுக்கு வருமானம் ஏதும் இருக்காது என்பதால் அரசு ஒவ்வொரு மீனவர்களின் குடும்பத்திற்கும் 5000 ரூபாய் நிவாரணமாக வழங்கி வருகிறது. இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் 60 நாட்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் இருந்து வருவதாகவும், இது தவிர புயல்-மழை காலங்களிலும் மீன்பிடி க்க தடை விதிக்கப்பட்டு அந்த காலத்திலும் நாங்கள் மீன் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆக மொத்தம் நாங்கள் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே மீன்பிடி தொழில் செய்ய முடிகிறது. இந்த சூழலில் அரசு வழங்கும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூபாய் 5 ஆயிரத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம் என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் நாங்கள் அனைவரும் படகுகள் மற்றும் வலைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், இதற்கான தொகையை கடன் வாங்கி செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே படகுகள் பராமரிப்பு செலவுக்காக ஒவ்வொரு படகிற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், நிவாரணத் தொகையை 30 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.