வலையில் பிடித்த நண்டை, மீண்டும் கடலுக்குள் விட்டால் ரூ.200 பரிசு

வலையில் அகப்படும் சினை நண்டுகளை கடலிலேயே உயிருடன் விட்டு வந்தால் நண்டு ஒன்றுக்குரூ.200 வழங்கப்படும் என மீனவகிராமம் அறிவிப்பு.

Update: 2021-07-26 12:15 GMT

சினை நண்டை மீண்டும் கடலுக்குள் விடும் இளைஞர். 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள கொள்ளுக்காடு கிராமம் மீனவர்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மீனவர்கள், நண்டு வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருவதால், கடல் வளம் குறைந்து மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நண்டு வளத்தை பெருக்கும் வகையில், வலையில் அகப்படும் சினை நண்டை உயிருடன் கடலிலே விட்டு விட்டு, அதை வீடியோவாக எடுத்து அனுப்புபவர்களுக்கு, ஒரு நண்டுக்கு 200 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கொள்ளுக்காடு கிராமம் சார்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள மீனவ மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி, கடல் வளத்தை பெருக்கவும், கடல் வளத்தை காக்கவும் இந்த கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராம மக்களின் புது முயற்சி கடல் ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News