வைரலான வீடியோ - ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த கலெக்டர்..!

இடப்பிரச்சினை காரணமாக வீடு கட்ட உறவினர்கள் தடுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பட்டா வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Update: 2021-06-20 14:15 GMT

இடப்பிரச்சினை காரணமாக வீடு கட்ட உறவினர்கள் தடுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பட்டா வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், 24 மணி நேரத்தில் அவருக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது வீட்டுக்கு நேரடியாகச் சென்று வீட்டு மனை பட்டாவை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சி, பட்டத்தூரணி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி மணியம்மை. குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது குடிசை வீட்டை புதுப்பித்துக் கட்ட முடிவு செய்தார். ஆனால், அந்த இடம் சம்பந்தமாக, உறவினர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்தினர். இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மணியம்மை, கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனைத்து பிரச்சினைகளையும் விரிவாகப் பேசி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் சீ.பாலசந்தருக்கும் சென்றது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, பட்டத்தூரணி கிராமத்துக்கு, நேரடியாகச் சென்று ஆய்வு செய்ததில், அந்த நிலம் புஞ்சை தரிசு வகைப்பாடு கொண்டது எனவும், வீட்டு மனைப் பட்டா வழங்க ஏதுவானது எனவும் தெரியவந்தது. இதையடுத்து மணியம்மைக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 24 மணி நேரத்துக்குள் அவர் கோரிக்கையை ஏற்று, வீட்டுமனைப் பட்டாவினை, சொர்ணக்காடு கிராமத்துக்கு, நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். அப்போது, பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார், கூடுதல் ஆட்சியர் வருவாய் சுகபுத்ரா, உதவி ஆட்சியர் சீ.பாலச்சந்தர், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News