எள், உளுந்து பயிர்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

எள், உளுந்து பயிர்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-11 11:00 GMT

தஞ்சாவூர் அருகே எள் சாகுபடியில் விவசாயி

எள், உளுந்தை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள மானாங்கோரை, அன்னப்பன்பேட்டை, நெய்தலூர் பகுதியில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சித்திரை பருவத்தில் விதைக்கப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. எண்ணெய் வித்துக்களில் எள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனால் எள் பயிர் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது நல்லெண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் எள்ளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் கோடை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பரவலாக அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் எள் சாகுபடி செய்து வருகின்றனர்,

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தனியார் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக அறுவடை செய்யப்படும் எள் மற்றும் உளுந்து ஆகியவற்றை எப்படி விற்பனை செய்யப் போகிறோம் என்ற கலக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

எனவே அரசு வேளாண் ஒழுங்குமுறை கமிட்டி மூலம் எள் மற்றும் உளுந்து ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News