பாபநாசம் அருகே பயங்கரம் தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலை
இருசக்கர வாகனத்தை திருட வந்த மர்ம் நபர்களை தடுத்த காவலாளியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கொலை செய்யப்பட ஜெயபால்.
தஞ்சையில் நாகை சாலையில் உள்ள விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜெயபால் (74). இவர் பாபநாசம் தாலுகா தளவாய்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பிளாஸ்டிக் பைப் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.18 ந்தேதி இரவு ஜெயபால் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இந்நிலையில் 19 நம் தேதி காலை பிளாஸ்டிக் பைப்பு கம்பெனியில் உரிமையாளரின் சகோதரர் தர்மராஜ் அங்கு வந்தார். அப்போது ஜெயபால் தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கம்பெனி வாசலில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்து, இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜெயபால் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவு மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கம்பெனியில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை திருட வந்த போது இரவு நேர காவலாளியான ஜெயபால் அதைத் தடுத்ததால், அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் பெரிய கருங்கல்லால் ஜெயபாலை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவரிடம் இருந்த செல்போன், அவரது ஸ்கூட்டர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்ததுள்ளது.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ரவிச்சந்திரன்,கைரேகை நிபுணர் கீதா ஆகியோர் ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலையாளிகள் ஸ்கூட்டரை திருடி சென்ற போது மாரியம்மன் கோவில் அருகே பெட்ரோல் இல்லாததால் அங்கேயே விட்டுச் சென்றனர். அந்த ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.