கபிஸ்தலம் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன: விவசாயிகள் வேதனை

கபிஸ்தலம் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன, இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Update: 2022-01-04 17:00 GMT

கபிஸ்தலம் பகுதியில் மழையால் நெற் பயிர்கள் சேதமடைந்திருப்பதை காணலாம்.

கபிஸ்தலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த திடீர் கனமழை காரணமாக கபிஸ்தலம், சருக்கை, இளங்கார்குடி, மேட்டுத்தெரு, கருப்பூர், மேல கபிஸ்தலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப் பரப்பில் தாளடி, சம்பா பயிர்கள் வயலிலேயே சாய்ந்தன.

வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் நெல் பயிர்கள் மீண்டும் முளைத்து விடும் அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இந்த பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிலப்பரப்பில் அதிக அளவில் கரும்பு பயிர் செய்திருந்தனர்.

திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை கடந்த சில வருடங்களாக மூடப்பட்டு விட்டதால் இங்கு உள்ள விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிர் செய்வதை தவிர்த்து நெல் பயிருக்கு மாறிவிட்டனர். இதனால் இந்த பகுதியில் உள்ள நிலங்களில் சுமார் 80 சதவீத அளவிற்கு நெல் பயிர்கள் பயிர் செய்து வருகின்றனர்.

தற்போது கனமழையால் பாதிக்கப்பட்ட நிலங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News