சமீபத்தில் பெய்த கனமழையால் தஞ்சை மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மஞ்சள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2022-01-11 14:45 GMT

மஞ்சள் கிழங்கை காட்டும் விவசாயி.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, சாலியமங்கலம், மெலட்டூர் ஆகிய பகுதிகளில் மஞ்சள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பாபநாசம் முன்னோடி விவசாயி சாமு.தர்மராஜன் கூறியதாவது:-

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மகசூல் மிகவும் குறைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு சில தினங்களே உள்ளதால் அறுவடை செய்ய ஆரம்பிக்கப்பட்டது. பயிர்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை. மேலும் மஞ்சள் கிழங்குகளும் நல்ல மகசூல் காணவில்லை. போதுமான விளைச்சல் இல்லாததால்  விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள், தோட்டக்கலை பயிர்களான வாழை, மஞ்சள் போன்ற பயிர்களும் எங்களுக்கு போதுமான விளைச்சலை தரவில்லை. ஆகவே தமிழக அரசு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அப்போதுதான் மறுசுழற்சி ஆக நாங்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News