பாபநாசத்தில் நூதன கொள்ளை: நகைகளை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

வீட்டு வேலைக்காரி போல் நடித்து, உரிமையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-09-30 03:45 GMT

பாபநாசத்தில் வேலைக்காரி போல் நடித்து நகைகளை கொள்ளையடித்த பெண்.

பாபநாசத்தில் வீட்டு வேலைக்காரி போல் நடித்து, உரிமையாளருக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தெற்கு வீதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர்கள் தஞ்சை பாபநாசம் சாலையில் முத்து மெஸ் கிராமிய முறை சமையல் என்ற சைவ உணவு விடுதியை‌ நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது உணவு விடுதிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து உணவு வாங்க வந்த பெண் ஒருவர் விஜயலட்சுமியிடம் தன்னுடைய பெயர் சாந்தா எனவும், தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்தவர் எனவும், பாபநாசம் ஆற்றங்கரை தெருவில் தங்கி கிடைக்கும் வேலைகளை செய்து வருவதாகவும் கூறிய அவர், தற்போது தனக்கு வேலை எதுவும் இல்லை எனவே தங்கள் உணவு விடுதியில் வேலை வழங்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு விஜயலட்சுமி தன்னுடைய கணவரிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் என கூறி அனுப்பியுள்ளார். பின்னர் தனது கணவர் திருநாவுக்கரசுவிடம் பெண் ஒருவர் வேலை கேட்டு வந்ததையும், எனக்கு உடல்நிலை சரி இல்லை எனவே அந்தப் பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்ளட்டுமா என கேட்டுள்ளார். அதற்கு திருநாவுக்கரசு சம்மதம் தெரிவித்து நேற்று அந்தப் பெண்ணை அழைத்து முகவரி மற்றும் அவர் குறித்த தகவல்களை சேகரித்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டு வேலைக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

அதன்படி நேற்று காலை வீட்டு வேலைக்கு சாந்தா வந்துள்ளார். இந்நிலையில் திருநாவுக்கரசு தான் கும்பகோணத்திற்கு சென்று வருவதாக தனது மனைவி விஜயலட்சுமியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் விஜயலட்சுமி, வேலைக்காரி சாந்தாவுடன் இருந்துள்ளார். அப்போது சாந்தா விஜயலட்சுமிக்கு காப்பி போட்டுக் கொடுத்துள்ளார். அதனை குடித்த விஜயலட்சுமி சிறிது நேரத்தில் மயங்கினார். பின்னர் சாந்தா, விஜயலெட்சுமியின் அணிந்திருந்த தாலிசெயின், வளையல், மோதிரம், தோடு உள்பட 6 1/2 பவுன் நகையை திருடி சென்று விட்டார்.

இதையடுத்து கும்பகோணத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்த திருநாவுக்கரசு வீட்டில் தனது மனைவி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டு வேலைக்காரி சாந்தாவை அழைத்துள்ளார். ஆனால் அவர் அங்கு இல்லை. மேலும் விஜயலட்சுமி அணிந்திருந்து நகைகள் அனைத்தும் காணாமல் போயிருப்பதை பார்த்த திருநாவுக்கரசு வீட்டு வேலைக்காரி போல் நடித்து தனது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை சாந்தா திருடிச் சென்றிப்பதை அறிந்தார்.

இதுகுறித்து திருநாவுக்கரசு பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, தலைமை காவலர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது திருநாவுக்கரசு போலீசாரிடம் சாந்தாவின் முகவரி உள்ளிட்ட விவரங்களை வழங்கினார். அதனைக்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் அனைத்தும் போலி என தெரியவந்தது. பின்னர் திருநாவுக்கரசர் தனது செல்போனில் எடுத்த சாந்தாவின் படத்தை போலீசிடம் வழங்கினார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாபநாசம் போலீசார் அந்த மோசடி பெண்ணின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விஜயலட்சுமிக்கு அதிக அளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News