பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் தஞ்சை மாவட்டத்தில் வெல்லம் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-07 13:15 GMT

வெல்லம் உற்பத்தி தீவிரம்.

பொங்கலை முன்னிட்டு அய்யம்பேட்டை பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை தான் கடைவீதிகளில் முக்கியத்துவம் பெறும்.

கரும்புச் சாறில் இருந்து தயாராகும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவை உடலுக்கு உறுதியை தரும் உணவு பொருளாக பயன்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு அச்சு வெல்லத்திற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனால், கரும்பு விவசாயிகள் இரவு, பகலாக அச்சு வெல்லம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் அய்யம்பேட்டையை சுற்றியுள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதிஅக்ரஹாரம், மாகாளிபுரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சு வெல்லம் தயார் செய்யப்படுகிறது.

தற்போது அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News