கபிஸ்தலம் அருகே ஓட்டல் உரிமையாளர் கடப்பாரையால் அடித்துக் கொலை

கபிஸ்தலம் அருகே ஓட்டல் உரிமையாளரை கடப்பாரையால் அடித்து கொலை செய்த இரவு காவலரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-07 03:26 GMT

கொலையான அசோக்குமார்.

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி மெயின் ரோட்டில் வசிப்பவர் அரியமுத்து மகன் அசோக்குமார் (49). உடல் ஊனமுற்றவர். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. அசோக்குமார் அண்டக்குடி மெயின்ரோட்டில் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவரது ஹோட்டலுக்கு அருகில் தங்கி தாராசுரம் நடராஜன் மகன் அன்பழகன் (50) என்பவர் அருகிலுள்ள திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையில் இரவு காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தினசரி அசோக்குமாரின் ஹோட்டலில் மாதச் சம்பளம் வாங்கி பணம் தருவதாக கூறி உணவு சாப்பிட்டு வந்துள்ளார். இந்த மாதம் தேதி 6 ஆகிவிட்டது என கூறி நேற்று மதியம் கடைக்கு வந்த இரவு காவலர் அன்பழகனிடம் பணம் கேட்டுள்ளார் அசோக்குமார். அப்பொழுது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இரவு காவலர் அன்பழகன் அருகில் கிடந்த கடப்பாறையை எடுத்து அசோக்குமாரின் தலையில் அடித்ததில் மயங்கி விழுந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனடியாக தகவல் அறிந்த பாபநாசம் டி.எஸ்.பி. பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அன்பழகனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News