தனியார் அரவை மில் கிடங்கில் பதுக்கியிருந்த 25 ஆயிரம் நெல் மூட்டைகள் பறிமுதல்

வல்லம் - ஒரத்தநாடு சாலையில், மருங்குளத் தில் மூடப்பட்டுள்ள தனியார்அரிசி ஆலையில் நெல்மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது

Update: 2021-08-28 15:15 GMT

 வல்லம் - ஒரத்தநாடு சாலையில், மருங்குளத் தில் மூடப்பட்டுள்ள தனியார்அரிசி ஆலையில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள்

தனியார் அரவை மில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட இரண்டு கோடி மதிப்பிலான, 25 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும்  நெல் கொள்முதல் முத்திரை பதித்த சாக்கு பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தஞ்சாவூர் அருகே வல்லம் - ஒரத்தநாடு சாலையில், மருங்குளத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளது.இந்த ஆலையில் உள்ள கிடங்குகளில் நெல் மூட்டைகள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உமாமகேஸ்வரி மற்றும், குடிமைபொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸார் உள்ளிட்ட அதிகாரிகள் மாலையில் திடீரென அந்த அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான, சுமார் 25 ஆயிரம் நெல் மூட்டைகளும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள முத்திரை பதித்து இருந்திருந்த 330 சாக்குகளையும் பறிமுதல் செய்து லாரிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.



இதுகுறித்து உமாமகேஸ்வரி கூறுகையில்: இந்த குடோனுக்கு எப்படி நெல் மூட்டைகள் வந்தது என்பது தெரியவில்லை. எவ்வித ஆவணங்களும் இல்லாததால் இந்த நெல் மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம். ஒரு கிடங்கில் 4 ஆயிரம் நெல் மூட்டைகளாக இருந்தது. மற்ற கிடங்குகளில் நெல் குவியல் குவியலாக உள்ளது. இதனை மூட்டைகளில் நிரப்பி குடோனுக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது. அதே போல் கொள்முதல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் 330 சாக்குகள் உள்ளது. இதில் லாட் எண்கள் இல்லாததால், எந்த கொள்முதல் நிலையத்திலிருந்து வந்தது எனத் தெரியவில்லை. இருந்தாலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும். இங்கு நெல் மூட்டைகளை பதுக்கி வைத்தது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் விசாரணை நடத்தி இதில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டுபிடிப்பார்கள். கொள்முதல் நிலையம் என்பது விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் வியாபாரிகள் நெல்லை கொண்டு வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News