ஆற்றில் குளிக்க சென்ற பாய் வியாபாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்

ஒரத்தநாடு அருகே கல்லணை கால்வாயில் குளிக்க சென்ற மதுரை பாய் வியாபாரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-22 08:00 GMT

கல்லணை கால்வாயில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்

மதுரை மாவட்டம், ஆண்டார் கொண்டாராம் கிராமம், கருப்ப பிள்ளை ஏந்தல் தெருவை சேர்ந்தவர் மங்களம். இவரது மகன் மணிகண்டன் 29. இவர் தனது தனது குடும்பத்தோடு ஒரத்தநாடு அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தில் தங்கி பல்வேறு பகுதிகளில் பாய் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு மணிகண்டன் மற்றும் அவரது சக நண்பர்கள் சூரக்கோட்டை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது  தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மணிகண்டன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தண்ணீரில் மூழ்கிய மணிகண்டனை அவரது நண்பர்கள் தேடிப்பார்த்து கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் ஒரத்தநாடு அருகே மேல உளூர் கல்லணை கால்வாய் ஆற்றில் உடல் மிதந்து வந்ததை கண்ட பொதுமக்கள் ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை  கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

பின் நடைபெற்ற விசாரணையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணிகண்டன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News