நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை பகுதியில் அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் காத்திருப்பதால், உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை

Update: 2021-09-08 03:00 GMT

குவித்து வைக்கப்பட்டிருக்கும் அறுவடையான நெல்

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்தி 20 ஆயிரம் ஏக்கர் இலக்குடன் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை, இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் காசவளநாடு கோவிலலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அப்பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்த நெல்லுடன், விவசாயிகள் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வருகிறது. இதனால் உடனடியாக நெல் கொள்முதல் பணியை தொடங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அறுவடை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இப்போதே காலதாமதம் செய்யாமல் கொள்முதல் செய்தால், நெல் தேக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News