அய்யனார் கோயிலில் 35 டன் எடையிலான யானை, குதிரை கற்சிலைகள் பிரதிஷ்டை.

இந்த சிலைகள் திருப்பூரில் இருந்து பெரிய லாரியில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரத்தநாடுக்கு கொண்டு வரப்பட்டது

Update: 2021-09-02 12:45 GMT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அய்யனார் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஓரேகல்லில் வடிக்கப்பட்ட யானை மற்றும் குதிரைசிலைகள்

ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில், யானை மேல் அழகர் அய்யனார் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதூர் கிராமத்தில், யானைமேல் அழகர் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டு பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், கிராம மக்கள் சார்பில், கடந்த 2017-ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகளை துவக்கினர். இதில், ரூ. 29 லட்சம் அறநிலையத்துறை சார்பிலும், மீதம் தொகை கிராம பொதுமக்கள் சார்பிலும் நிதிதிரட்டி சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இக்கோயில் முழுவதும், கருங்கற்களை கொண்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ,70 அடி நீளமும், 36 அடி அகலமும், 13 அடி உயரமும் கொண்ட மகா மண்டபத்தில், கலை நுட்பத்துடன் கூடிய 32 தூண்கள் அமைக்கப் பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில், ரூ.27 லட்சம் மதிப்பீட்டில், கோயில் மகாமண்டப முகப்பில் இருபுறம் வைக்க, 50 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில், 23 டன் அளவுக்கு யானை சிலை, 11 அடி உயரத்திலும், 13 அடி நீளத்திலும் வடிவமைக்கப்பட்டது. அதே போல், 30 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில், 12 டன் அளவில் குதிரை சிலையும், 11 அடி உயரமும், 13 அடி நீளத்திலும் வடிமைக்கப்பட்டது. மேலும், கோயில் சுற்றுச்சுவரில் பக்தர்களை வரவேற்கும் வகையில் 6.5 அடி உயரத்தில் இரண்டு விளக்குடன் கூடிய பாவை கற்சிலையும், இதே போல் நான்கு அடி உயரத்தில் யானை பாகன் சிலையும் வடிவமைக்கப்பட்டது.

இந்த சிலைகளை, திருப்பூரில் இருந்து பெரிய லாரியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்  ஒரத்தநாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் மேள, தாளம் வானவேடிக்கையுடன், கடைவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் பலரும் வழியில் சிலைகளுக்கு மலர் தூவி  வழிபட்டனர். தொடர்ந்து  கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட மேடையில், கிரேன் மூலம் இரு சிலைகளும் பீடத்தில் பொருத்தப்பட்டது. தொடர்ந்து இரு சிலைகளுக்கும் பட்டு துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் நடத்தி, தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து, சிலைகளை வடித்த சிற்பி மணி அவரது சகோதர்கள், புதுக்கோட்டை நமணசமுத்திரத்தைச் சேர்ந்த சிற்பி ஆ.முத்து ஆகியோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், பாராட்டி சால்வை அணிவித்தனர்.

Tags:    

Similar News