தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

ஒரத்தநாடு அருகே தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து.

Update: 2021-06-20 14:15 GMT

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே சூரக்கோட்டை சைதாம்பாள்புரத்தில் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தேங்காய் மட்டையிலிருந்து நார் தனியாக பிரித்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்தி வருகிறார்.

வழக்கம் போல இந்த தொழிற்சாலையில் தேங்காய் மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பற்றி எரிந்தது. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை 5 மணி வரை 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டது. இந்த தீ விபத்தில் தென்னை நார்கள் மற்றும் தேங்காய் மட்டைகள் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள், தேங்காய் மட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போன்றவை எரிந்து சேதமடைந்தன. இதன் சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News