ஆடுதுறையில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் மோசடி: டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்

ஆடுதுறையில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் 300 கோடி மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்

Update: 2022-04-12 02:45 GMT

சீட்டு நிறுவன மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் டிஎஸ்பியிடம் மனு அளித்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருமங்கலக்குடியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் சுமார் 40 ஆண்டுகாலமாக ஆடுதுறையில் சித்ரா சிட்பண்ட் என்ற பெயரில் ஏலச்சீட்டு மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து சீட்டு மற்றும் டெபாசிட் என பணம் கட்டி இருந்தனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென நிதி நிறுவனம் மூடப்பட்டு அனைவரும் தலைமறைவாகினர். இதில் சுமார் 300 கோடி வரை பணம் மோசடி நடைபெற்றுள்ளது.

இதுபற்றி திருச்சி பொருளாதார குற்றவியல் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் ஆகியும் பணம் திரும்பக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் இன்று ஆடுதுறையில் உண்ணாவிரதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். போலீசார் அனுமதிக்காததால் 200-க்கும் மேற்பட்டோர் தனியார் திருமண மண்டபத்தில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் திருவிடைமருதூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று டிஎஸ்பி வெற்றிவேந்தனிடம் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.

அனைவரும் திரண்டு டிஎஸ்பி அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News