பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

Update: 2022-04-23 18:30 GMT

தமிழகத்தில் புதிய விவசாய மின் இணைப்புகளுக்காக கடந்த 18 ஆண்டுகளாக காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளில் தற்போது ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் முன்பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் விரைந்து மின் இணைப்புகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்.வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு கட்டணமில்லா மின் வினியோகப்படுகிறது.

அதேபோல கீரைகள், பழங்கள், தானியங்கள் மற்றும் காய்கறி சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு கட்டணம் இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி சம்பந்தம் தலைமை  வகித்தார். விவசாயிகள் சின்னதுரை, ஆதிசிவம், அஞ்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.இதில் விவசாயிகள் நீர் மூழ்கி மோட்டாரை வைத்திருக்க பயன்படுத்தப்படும் அட்டையை தலையில் சுமந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் விவசாயி சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News