கரும்பு விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை நிலத்தை கைப்பற்ற போராட்டம்

கரும்பு விவசாயிகளை ஏமாற்றி வங்கிகளில் கடன் பெற்ற சர்க்கரை ஆலை நிலத்தை கைப்பற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-09-22 12:00 GMT

விவசாயிகள் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான வடசறுக்கையில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற  விவசாயிகள்.

 கரும்பு விவசாயிகளை ஏமாற்றி அவர்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மூலமாக ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்த சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் 100 ஏக்கர் நிலத்தை கைப்பற்றுவதற்காக 30 டிராக்டர்களில் ஊர்வலமாக வந்து, நிலத்தை உழுது போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம்,  திருமங்கலக்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையில் கும்பகோணம், பாபநாசம், சருக்கை, கருப்பூர், குடிகாடு, புத்தூர், மேட்டுத்தெரு, உம்பளாப்பாடி, கபிஸ்தலம், இளங்கார்குடி பகுதியில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து சர்க்கரை ஆலைக்கு வழங்கி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் ஏமாற்றியதால் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கொள்முதல் நிறுத்தப்பட்டு, சர்க்கரை ஆலை மூடப்பட்டது. இந்நிலையில், நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கடந்த நான்காண்டுகளாக கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சர்க்கரை ஆலை நிர்வாகம் 213 விவசாயிகளை ஏமாற்றி கையெழுத்து வாங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 50 கோடி கடன் பெற்றுள்ளனர். இதேபோல் மூன்று வங்கிகளில் விவசாயிகள் பெயரில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.இந்த நிலையில், வங்கி நிர்வாகம் கடனை திருப்பி செலுத்துமாறு விவசாயிகளிடம் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான  வடசறுக்கையில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி,  வடசறுக்கை முகப்பில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புத் தோகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 30 டிராக்டரில் ஊர்வலமாக வந்து ஆலய நிர்வாகத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை உழவு செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாபநாசம் டிஎஸ்பி பூரணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாசில்தார் மதுசூதனன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆர்டிஓ தலைமையில் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினருடன் விசாரணை கூட்டம் நடத்தப்பட்டு நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News