கும்பகோணத்தில் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்திருந்த 16 வீடுகள் அகற்றம்

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 50 ஆண்டுகளாக சிலர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர்

Update: 2021-08-31 11:21 GMT

கும்பகோணத்தில் உள்ள கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 16 வீடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி நிலத்தை மீட்டனர்.

கும்பகோணம், பெருமாண்டி தெற்குதெரு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 50 ஆண்டுகளாக சிலர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட 16 வீடுகளை உடனடியாக அகற்ற வீட்டின் உரிமையாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றாமல் தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் இளையராஜா உத்தரவின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று காலை பெருமாண்டி தெற்கு தெரு பகுதியில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 16 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம்  அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் விஜயகுமார் மேற்பார்வையில் மின் வாரிய ஊழியர்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.  இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது கும்பகோணம் கிழக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News