உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. உள்ளது என அறிவித்துள்ளேன் என்றார் ஜி.கே.வாசன்

Update: 2022-01-27 15:30 GMT

கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் 

கும்பகோணத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும்   கூறியதாவது:-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை படையினர் தாக்கி ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றுள்ளார்கள். இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மாநில, மத்திய அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். பணபலம், அதிகார பலம், ஆள் பலம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். இவற்றை அனுமதிக்கக்கூடாது.

வாக்காளர்கள் நியாயமானவர்களுக்கும், நல்லவர்களுக்கும் வாக்களிக்க வேண்டும். விடுதலைப்போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் நாம் மதிக்க வேண்டும். அவர்கள் பேரில் அரசியல் செய்யக்கூடாது. தஞ்சை பள்ளியில் நடந்த சம்பவத்தில் தனது மகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும்.

கொரோனாவை காரணம் காட்டி மதுக்கடைகளை மூடி இருக்கலாம். கிராமசபை கூட்டங்கள் நிறுத்தி இருக்க கூடாது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. உள்ளது என அறிவித்துள்ளேன். இதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு ஆலோசனைகள் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.இன்னும் நான்கு நாட்களுக்குள் இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலில் வெல்ல கூடிய சூழலை உருவாக்கும் என்றார் ஜி.கே.வாசன்.

பேட்டியின் போது தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாநிலச் செயலாளர் சாதிக் அலி, மாவட்ட துணை தலைவர் சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணைதலைவர் ஸ்ரீராம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News