கும்பகோணத்தில் போலீசாரை தாக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது
கும்பகோணத்தில் தடையை மீறி தொடர்ந்து ஆற்றில் மணல் அள்ளிய 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் வசிப்பவர் சுக்குரு மகன் செல்வம் (30). அதேஊர் வாட்டர் டேங்க் தெருவில் வசிப்பவர் அன்பழகன் மகன் ரஜினி (எ) அருண்பாண்டியன் (23). செல்வமும், ரஜினியும் கடந்த 8ம் தேதி அதே பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மேலும் சிலருடன் சேர்ந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளினர்.
தகவலறிந்த எஸ்.ஐ. செல்வகுமார் மற்றும் போலீசார் சென்றபோது மணல் அள்ளியவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், எஸ்.ஐ.யை, மணல் அள்ளிய கும்பல் தாக்கிவிட்டு தப்பியோடியது. இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிந்து 8 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த செல்வம், ரஜினி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்று போலீஸ் எஸ்.பி. சேகர் பரிந்துரையின்படி தாலுகா இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆணையுறுதி மற்றும் இதர ஆவணங்களை தாக்கல் செய்தார்.
அதன் பேரில், செல்வம், ரஜினியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி கும்பகோணம் தாலுகா போலீசார் செல்வம், அருண் பாண்டியனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.