செவிலியரின் அலட்சியத்தால் கொரோனா தடுப்பூசி போடாமலேயே சான்றிதழ் வழங்கல்

செவிலியரின் அலட்சியத்தால் கொரோனா தடுப்பூசி போடாத நபருக்கு குறுஞ்செய்தி மூலம் சான்றிதழ் அனுப்பியதால் அதிர்ச்சி

Update: 2021-12-04 13:45 GMT

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ஊராட்சியில் 100 சதவீத தடுப்பூசி போடுவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊழியர்கள் குழு முயற்சி எடுத்து ஆங்காங்கே முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 4ம் தேதி நாச்சியார்கோவில் அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடந்த முகாமில், தடுப்பூசி போடாத நாச்சியார் கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு கொரோனா இரண்டாவது தவணை போட்டதாக சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது.  குறுஞ்செய்தியை பார்த்த அந்தப் பெண் கணவருடன் சம்பந்தப்பட்ட முகாமுக்கு சென்று  அங்கு பணியாற்றும் முருக்கங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் கிராம சுகாதார செவிலியரிடம் விவரம் கேட்டனர்.

ஆனால், இது போன்ற குறுந்தகவல் அதிக பேருக்கு வந்து கொண்டிருக்கிறது என்று அந்த செவிலியர் அலட்சியமாக பதில் கூறினாராம். இதனால், அதிர்ச்சியடைந்த பயனாளி மற்றும் அவரது கணவர்,  சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.இது போன்ற தடுப்பூசி போடாமல் சான்றிதழ் வருவதை கண்காணிக்க  வேண்டுமெனவும், இதற்கு காரணமான  செவிலியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க  வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News