உரிய சான்று இல்லாமல் இயக்கிய தனியார் பள்ளி வாகனங்கள் சிறைபிடிப்பு

உரிய சான்று இல்லாமல் இயக்கிய தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் சிறைபிடித்து அபராதம் விதித்தனர்.

Update: 2022-02-06 12:30 GMT

சிறைப்பிடிக்கப்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள்.

கும்பகோணம் பகுதியில் ஒரு சில தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளை ஏற்றிச்செல்ல பள்ளி வாகனங்களை உரிய தகுதி சான்று பெறாமல் பயன்படுத்தி வருவதாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதனையடுத்து தஞ்சை சரக துணை போக்குவரத்து ஆணையர் கருப்புசாமி உத்தரவின்பேரில், கும்பகோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை கும்பகோணம் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் பயன்படுத்தி வந்த வாகனங்களை ஆய்வு செய்தனர்.

இதில் அந்த பள்ளிகளில் பயன்படுத்தி வந்த 5 வாகனங்களுக்கு உரிய தகுதி சான்று, காப்பு சான்று மற்றும் சாலைவரி செலுத்தப்படாமல் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை சிறைபிடித்த போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய சான்று இல்லாமல் வாகனங்களை பயன்படுத்திய பள்ளி நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

உரிய அனுமதி சான்று இல்லாமல் வாகனங்களை பயன்படுத்தி வருவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News