கும்பகோணம் அருகே உணவு ஒவ்வாமையால் பெண் உயிரிழப்பு

முதல்நாள் இரவும் மறுநாள் காலையிலும் அரிசி சாதத்துடன் முருங்கைக்கீரை, மீல்மேக்கர் ஆகியவற்றை சாப்பிட்டதால் இந்த விபரீதம்

Update: 2021-09-02 13:56 GMT

பைல் படம்.

கும்பகோணம் அருகே உணவு ஒவ்வாமை காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

கும்பகோணம் அருகே சோழபுரம் கீழஅத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வசந்தநாதன்(60). இவரது மனைவி கலைச்செல்வி (48), மகள் ஜெயப்பிரியா (24), பேரன் மித்ரன் (4) இவர்கள் நான்கு பேரும் ஆக.31-ம் தேதி இரவு உணவாக அரிசி சாதத்தோடு முருங்கைக்கீரை மற்றும் மீல்மேக்கர்  ஆகியவற்றை  சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், மறுநாள் செப்.1-ம் தேதி காலை உணவாக, மீண்டும் அதே உணவை சாப்பிட்டதால், பகல் முழுவதும் நான்கு பேருக்கும் தொடர்ச்சியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்  கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். இதில் கலைச்செல்வி(48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ள மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சோழபுரம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

Similar News