கும்பகோணத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான பைரவர் கற்சிலை கண்டுபிடிப்பு

கும்பகோணம் அருகே ஏரிநத்தம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பைரவர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-07-27 09:40 GMT

கும்பகோணத்தை அடுத்த துக்காச்சி ஊராட்சி,  ஏரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு அதே பகுதியில் வயல்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அவரது வயலின் அருகில் உள்ள சிறிய குட்டையில் மண்ணை எடுத்து, கரையை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிறிய குட்டையில் உள்ள மண்ணை அகற்றும் போது, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான 4 அடி உயரமுள்ள கல்லினாலான பைரவர் சிலை கிடைத்தது.

இதனையடுத்து அருண்குமார் ஊராட்சி மன்றத்தலைவர் சசிகலா சரவணனிடம் தெரிவித்தார். பின்னர் வருவாய் ஆய்வாளர் ரமாபிரபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பைரவர் கற்சிலையை கும்பகோணம் தாலுக்கா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, தாசில்தார் கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.



Tags:    

Similar News