கும்பகோணத்தில் விவசாய மின் இணைப்புகள் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்து பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவசாய மின் இணைப்புகளை வழங்கக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-08-31 11:13 GMT

தஞ்சை மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கும்பகோணத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு, தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி குலசேகரநல்லூர் விசுவநாதன் தலைமை வகித்தார். விவசாயிகள் வரதராஜன், தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமல்நாதன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2003-ம் ஆண்டு முதல் விவசாய மின் இணைப்பு கேட்டு சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில் இதுநாள் வரை மின் இணைப்பு கிடைக்கப்பெறாமல் காத்திருக்கின்றனர்.

தமிழகம் கடந்த ஆறு ஆண்டுகளாக மின் மிகை மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை கடந்த அதிமுக அரசு வழங்கவில்லை.

தமிழ்நாடு மின்சார வாரியம் தட்கல் மற்றும் சுயநிதி திட்டங்கள் மூலம் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என கூறிய நிலையில், ஒரு வருடம் கடந்தும் இன்று வரை இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, உடனடியாக விவசாய மின் இணைப்புகளை வழங்க கோரி முழக்கங்களை எழுப்பினர். முடிவில் விவசாயி ஆதி.கலியபெருமாள் நன்றி கூறினார்.

Similar News